காட்டில் கேரம்போர்டு; அலறவிட்ட டிரோன் கேமரா
ஆளில்லா விமான கேமரா மூலம் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது கேரம்போர்டு விளையாடிய இளைஞர்கள் கேமராவை பார்த்ததும் ஓடிய காட்சிகளை காவல்துறையினர் நகைச்சுவையாக உருவாக்கி விழிப்புணர்வுக்காக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்கி இருந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் .
அப்பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வெளியில் நடமாடுவதை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தற்போது டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் திருப்பூர் வடக்கு தொகுதிக்குட்பட்ட பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் வடக்கு காவல் துறையினர் கேமரா மூலம் சோதனையில் ஈடுபட்ட போது கும்பலாக நின்று கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் கேமராவை பார்த்ததும் ஓடுவதும் ஒருவர் மட்டும் மீண்டும் வந்து கேரம் போர்டினை எடுத்துச் சென்று கேமராவில் தன் முகம் தெரியாதவாறு மறைந்து உட்கார்ந்து மீண்டும் ஓடுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது.
இதனை பதிவு செய்த காவல்துறையினர் அதை நகைச்சுவையாக உருவாக்கி பொது மக்களின் விழிப்புணர்வுக்காக சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது போல யாரும் கும்பலாக வெளியில் நடமாடக் கூடாது. காவல்துறை எந்நேரமும் தங்களை கண்காணித்து வருவதாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த காட்சிகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.