முதுகலை மருத்துவ படிப்பில் மாநில அரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி
மருத்துவ முதுகலை படிப்பில் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு உரிமை இருப்பதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த ஒதுக்கீடு தொடர்பாக இந்திய மருத்துவ கழகம் முடிவு செய்ய எந்த அதிகாரமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. மீதியுள்ள இடங்களில் 50 சதவீதம் தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முன்னர், உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. அதனை உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது.
மேலும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளைப் பின்பற்றி இடங்களை நிரப்பவும் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் எளிதில் அணுக முடியாத மருத்துவமனைகள் காணப்படும் இடங்களை வரையறை செய்ய குழு அமைக்கப்பட்டது.
16 மாவட்டங்களில் எளிதில் அணுக முடியாத மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளதாக அக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் முதுநிலை படிப்பில் சலுகை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
பின்னர் இந்திய மருத்துவ கழகம் சலுகை மதிப்பெண்களுக்கான அறிவிப்பை மாற்றியமைத்தது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அருண் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த மாதம் 14ம் தேதி விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, முதுகலை மருத்துவப் படிப்பில் மாநிலங்களில் இடஒதுக்கீடு தொடர்பாக, இந்திய மருத்துவ கழகம் முடிவு செய்ய எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்துள்ளது. முதுகலை மருத்துவ படிப்பில் மாநில அ ரசுகள் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.