பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு: தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் ஆஜராகிறார் ரியா சக்ரபோர்த்தி
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக, தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பினரிடம், தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ஆஜராகும்படி, அவரது காதலி ரியா சக்ரபோர்த்திக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்த வழக்கில் புதிய திருப்பமாக, நடிகர் சுஷாந்த் சகோதரி மீது நடிகை ரியா சக்ரபோர்த்தி புகாரளித்துள்ளார்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள வீட்டில், பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அவரது காதலி ரியா சக்ரபோர்த்தி மற்றும் அவரது சகோதரர் சவுயிக் சக்ரபோர்த்தி உள்ளிட்டோர் மீது, சிபிஐ – அமலாக்கத் துறை – தேசிய போதைப் பொருள் தடுப்பு அமைப்பு ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
நடிகை ரியா சக்ரபோர்த்தியின் சகோதரர் சவுயிக் சக்ரபோர்த்தியை போதைப் பொருள் தடுப்பு அமைப்பு அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், இது தொடர்பாக ரியா சக்ரபோர்த்தியிடம் தொடர்ந்து இரண்டு நாட்களாக மும்பையில் உள்ள அலுவலகத்தில் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, தான் அனைத்தையும் சுஷாந்த்திற்காக மட்டுமே செய்ததாக ரியா சக்ரபோர்த்தி வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கு இன்றும் நேரில் ஆஜராகும்படி, நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு போதைப் பொருள் தடுப்பு அமைப்பினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, சுஷாந்த் சிங் மரண வழக்கில் புதிய திருப்பமாக, அவரது சகோதரி பிரியங்கா மற்றும் டெல்லி ஆர்.எம்.எல்., மருத்துவமனை மருத்துவர் தருண் குமார் உள்ளிட்டோர் மீது போதைப் பொருள் தடுப்பு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யும்படி மும்பை போலீசாரிடம் ரியா சக்ரபோர்த்தி புகார் அளித்துள்ளார்.