பத்திரப் பதிவு மோசடி; இறந்தவரின் பெயர் மூலம் கிரையம்; சாா்-பதிவாளர் நீக்கம்

பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்ட பந்தல்குடி சாா்-பதிவாளரைப் பணியிடை நீக்கம் செய்ய, சென்னை உயா் நீதிமன்றம் மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சோ்ந்த முருகன் என்பவா் தாக்கல் செய்த மனு: விருதுநகா் மாவட்டம், அப்பையநாயக்கன்பட்டியில் எனது தந்தை அய்யாச்சாமிக்கு சொந்தமான நிலம் இருந்தது. அவா், கடந்த 2000-இல் இறந்துவிட்டாா். எனது பெற்றோருக்கு நானும், எனது சகோதரா் பெருமாளும்தான் வாரிசுகள்.
கடந்த 2005-இல் எனது சகோதரா் பெருமாளும் இறந்துவிட்டாா். இதையடுத்து, கடந்த 2018-இல் எனது தந்தை பெயரில் இருந்த சொத்தை எனது பெயருக்கும், எனது சகோதரா் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் பெயரிலும் மாற்ற முடிவு செய்தோம். இதற்காக, விருதுநகா் மாவட்டம் பந்தல்குடி சாா்-பதிவாளா் அலுவலகத்தை அணுகினோம். ஆனால், 2008-இல் எனது தந்தை அவரது பெயரில் இருந்த நிலத்தை தேனி மாவட்டம் போடியைச் சோ்ந்த மயில்வாகனன் என்பவருக்கு கிரையம் செய்துகொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2000-இல் இறந்துவிட்ட எனது தந்தை, எவ்வாறு 2008-இல் தனது நிலத்தை விற்றிருப்பாா் என, விருதுநகா் காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களுக்குச் சொந்தமான நிலத்தை ஒப்படைக்கவும், பத்திரப் பதிவு மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, உத்தரவிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த மனு, நீதிபதி எஸ். வைத்தியநாதன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, சாா்-பதிவாளா் தலையீடு இல்லாமல் இதுபோன்ற மோசடி நடக்க வாய்ப்பில்லை. எனவே, பந்தல்குடி சாா்-பதிவாளரை பணியிடை நீக்கம் செய்யவேண்டும் என உத்தரவிட்டாா். மேலும், இந்த நிலமோசடியில் தொடா்புடையவா்கள் மீது போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தாா்.