சீரம் நிறுவனத்தின் 11 கோடி தடுப்பூசிக்கு ரூ.1,700 கோடி: மத்திய அரசு

புது தில்லி: சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் 11 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்குவதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.1,732.50 கோடியை வழங்கியுள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது:

மே, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் 11 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்க அந்த நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ.1,732.50 கோடியை விடுவித்துள்ளது.

மூலவரி பிடித்தம் போக ரூ.1,699.50 கோடியை சீரம் நிறுவனம் ஏப்ரல் 28-ஆம் தேதியன்று பெற்றுக் கொண்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி இறுதியாக 10 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை தயாரித்து வழங்க கேட்டுக் கொள்ளப்பட்ட நிலையில் மே 3-ஆம் தேதி வரையில் 8.744 கோடி தடுப்பூசிகளை சீரம் நிறுவனம் விநியோகித்துள்ளது.

இதுதவிர, 5 கோடி கோவேக்ஸின் தடுப்பூசிகளை பாரத் பயோடெக் நிறுவனத்திடமிருந்து பெறுவதற்காக அந்த நிறுவனத்துக்கு முன்பணமாக ரூ.787.50 கோடியை மத்திய அரசு ஏப்ரல் 28-ஆம் தேதி விடுவித்துள்ளது. இறுதியாக 2 கோடி தடுப்பூசிகளை பெற அந்த நிறுவனத்திடம் ஆா்டா் கொடுக்கப்பட்டு மே 3 வரையில் 0.8813 கோடி தடுப்பூசிகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

மே 2-ஆம் தேதி நிலவரப்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக 15.54 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. இன்னும், மாநிலங்களிடம் 78 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

அடுத்த 3 நாள்களில் மேலும் 56 லட்சம் கரோனா தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

எனவே, மத்திய அரசு கரோனா தடுப்பூசிகளை பெறுவதற்காக புதிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்பதுடன் அடிப்படை ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x