சென்னையில் 4 ஆயிரத்தை நெருங்கும் கரோனா மரணங்கள்!!

சென்னையில் இதுவரை கரோனா தொற்றால் 2 லட்சத்து 22 ஆயிரத்து 888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 15 ஆயிரத்து 898 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது 3,022 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஒரு மாதமாக தினமும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 400-க்கும் கீழ் பதிவாகி வருகிறது. சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்கள் உள்ள நிலையில், அவற்றில் 11 மண்டலங்களில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 1 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகபட்சமாக அடையார் மண்டலத்தில் 457 பேர் (3 சதவீதம்) சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,968 ஆக உள்ளது. அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 503 பேர், அண்ணாநகர் மண்டலத்தில் 446 பேர், கோடம்பாக்கம் மண்டலத்தில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாதொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அடுத்த சில தினங்களில் 4 ஆயிரத்தை கடக்க உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: கரோனா மரணங்களை குறைப்பதற்காகவே, மாநகராட்சி சார்பில் தினமும் வீடு வீடாக பரிசோதனை செய்து, கரோனா அறிகுறி இருந்தவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். இதன் காரணமாக இறப்பு சதவீதம் 1.78 சதவீதமாக குறைந்துள்ளது.