தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்!
தேசியக் கொடி அவமதிப்பு வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் பெரியார் சிலைகள் அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவங்களைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளைக் களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கண்டனம் தெரிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக இணையதள பதிவு ஒன்றில், நடிகர் எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் தேசியக் கொடியை அவமதித்து, தமிழக முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசிய எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி, தேசியச் சின்னங்கள் அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்கக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து எஸ்.வி.சேகர் மனுத் தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக்கொள்வதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையினரின் விசாரணைக்குத் தேவைப்படும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.