தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15-ம் தேதி வெளியிடப்படும்” தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் வரும் ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கியுள்ளன. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் காட்சிகள் கூட்டணியில் மாற்றங்கள் வருமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இன்னும் 7 மாதங்களே உள்ளன. கொரோனாவால் முடங்கியிருந்த அரசியல் நடவடிக்கைகள் மெல்ல வேகமெடுக்க தொடங்கியுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜனவரி 15ல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைபவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், திருத்தங்கள் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. பெயர் சேர்த்தல், திருத்தல் பணிகள் முடிவுற்று, சரிபார்க்கப்பட்டு, ஜனவரி 15ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.