“கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலத்தை கையகப்படுத்த தடையில்லை” உயர்நீதிமன்றம் உத்தரவு!

கோயம்புத்தூரில் உள்ள விமான நிலையத்தின் ஓடுதளம் மிகவும் சிறியதாக இருப்பதால் சர்வதேச விமானங்களை தரையிறக்குவது மிகவும் சிரமமாக இருந்தது. இதனால் கோவை சர்வதேச விமான நிலையத்தை ரூ.5000 கோடி செலவில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய 2017ல் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது.
அப்போது முறையாக கருத்து கேட்கவில்லை, தங்களது எதிர்ப்புகளை பரிசீலிக்கவில்லை, தங்களுடைய நிலத்திற்கு செல்ல பாதை கிடைக்காது என கோவை காளபட்டியைச் சேர்ந்த அம்மணியம்மாள் உள்ளிட்ட 12 பேர் வழக்கு தொடுத்திருந்தனர். இதைத் தொடர்ந்து நிலம் கையகப்படுத்த நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.
அதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. “நிலம் கையகப்படுத்துவதற்கு இழப்பீடாக நில உரிமையாளர்களுக்கு தொகை நிர்ணயிக்கப்பட்டு, அந்த தொகையை பெற்றுக்கொள்ள அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளனர். எனவே தடை உத்தரவை நீக்க வேண்டும்” என அரசு சார்பில் வாதிடப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கு நிலுவையில் உள்ளபோதே இழப்பீடு பெறுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக அரசு தெரிவித்ததை ஏற்று, ‘கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த தடையில்லை’ என தீர்ப்பளித்துள்ளது.