ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்துக்கதுறை அனுப்பிய சம்மனுக்கு இடைக்காலத் தடை விதித்தது உயர்நீதிமன்றம்!!

முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்துக்க துறை அனுப்பிய சம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசில் இணை அமைச்சராக இருந்தவர் ஜெகத்ரட்சகன். தற்போது அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கடந்த 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை சட்டத்துக்கு உட்பட்டு முறையாக வாங்கியதாக தெரிவித்துள்ளார்.
அந்த நிறுவனம் தனக்குத்தான் உரிமை உள்ளது என்று தாஸ் என்பவர் நீதிமன்றங்களில் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ள நிலையில் இதுதொடர்பாக அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு முடித்து வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலையில் தமிழக டிஜிபி அந்த வழக்கை மீண்டும் விசாரித்து வருவதன் அடிப்படையில் அமலாக்கத்துறை தனக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் தரப்பில் “நிறுவனம் முறைப்படி வாங்கியதாகவும், இது தொடர்பான வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது அமலாக்கத்துறை இந்த சம்மன் அனுப்பி உள்ளதாக இது சட்டவிரோதம் என்றும், அமலாக்கத் துறைக்கு இதற்கு அதிகாரம் இல்லை. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமலாக்கத்துறை சம்மனுக்கு நான்கு வாரம் தடை விதித்து வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.