ஆன்லைன் மருந்து நிறுவனமான நெட்மேட்ஸின் பெரும் பங்குகளை கைப்பற்றிய ரிலையன்ஸ்!!

நெட்மெட்ஸ் எனும் ஆன்லைன் மருந்து நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை ரிலையன்ஸ் குழுமம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இ-காமர்ஸ் வணிகத்தில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. ஆன்லைனில் பலசரக்கு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய ஜியோ மார்ட் சமீபத்தில் தொடங்கப்பட்டது. மேலும், ஆன்லைன் வர்த்தக துறையைச் சேர்ந்த, ஸ்டார்ட் அப் நிறுவனங்களான, அர்பன்லேடர், மில்க்பாஸ்கெட் ஆகியவற்றை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.
இப்போது ஆன்லைன் மருந்தக நிறுவனமான, நெட்மெட்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை ரிலையன்ஸ் வாங்கியுள்ளது. நெட்மெட்ஸின் 60 சதவித பங்குகள் ரூ.620 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது ரிலையன்ஸ். இது குறித்து நெட்மெட்ஸ் நிறுவனத்தின் தலைவர் பிரதீப் தாதா கூறும்போது “ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைவது மகிழ்ச்சியை தருகிறது. இதன் மூலம் நெட்மெட்ஸ் சேவை விரிவடையும். அனைத்து தரப்பு மக்களுக்கும் இந்தப் பலன் சென்றடையும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆன்லைன் மருந்து விற்பனை சேவைக்கு போட்டியாளராக ஜெஃப் பெஸாஸின் அமேசான் நிறுவனம் “அமேசான் பார்மஸி” எனும் ஆன்லைன் வர்த்தகத்தை ஏற்கெனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.