“காந்தி குடும்பத்தைச் சாராதவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வேண்டும்’” – பிரியங்கா காந்தி!!

காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அகமது படேல், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் எடுத்து கூறியும் அவர் மீண்டும் பதவியேற்க மறுத்து விட்டார். இதையடுத்து கடந்தாண்டு ஆகஸ்ட் 10ம் தேதி சோனியாகாந்தி இடைக்கால தலைவராக பொறுப்பேற்றார்.

தற்போது, சோனியா காந்தி பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்த நிலையில், ராகுல் காந்தி தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் மீண்டும் வலுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர், சஞ்சய் ஜா உட்கட்சி நடவடிக்கைகளை விமர்சித்து வந்ததால், கடந்த மாதம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், சஞ்சய் ஜா தனது டிவிட்டர் பதிவில், “எம்பி.க்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள், கட்சியின் நிலைமையை பார்த்து பொறுக்க முடியாமல், வெளிப்படையான தேர்தலை நடத்தி கட்சிக்கு புதிய தலைவரை தேர்வு செய்ய வலியுறுத்தி சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.’’ என்று கூறியுள்ளார். இது சர்ச்சையை கிளப்பியது.
இந்த சூழலில் தனியார் ஊடகத்துடனான பேட்டி ஒன்றில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் பதவி குறித்து கூறுகையில், “காந்தி குடும்பத்தில் இருந்து எவரும் காங்கிரஸ் தலைவராக கூடாது என்று ராகுல் காந்தி கூறி இருக்கிறார். காந்தி குடும்பத்தினர் அல்லாதவர் கட்சியின் அடுத்த தலைவராக இருக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் நிலைப்பாடு. நான் ராகுலுடன் முழுமையாக உடன்படுகிறேன். கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் யார், தங்களது அடுத்த தலைவராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும்.புதிதாக வரும் தலைவர் என்னை உத்தரப்பிரதேசத்திற்கு பதிலாக அந்தமான் நிக்கோபருக்குச் போக சொன்னாலும் போக நான் தயாராக உள்ளேன்.” என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்..