“கொரோனா மருந்து மட்டும் கண்டுபிடித்துவிட்டால், அனைவருக்கும் இலவசம்” என அறிவித்த பிரதமர்!!
கொரோனா தடுப்பு மருந்து கிடைத்தால் ஆஸ்திரேலியாவில் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரிதாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் விழிபிதுங்கி நிற்கின்றன. இதற்கான தடுப்பு மருந்து கண்டறிவதும் சோதனை அளவிலேயே இருக்கின்றன. ஆனால், ரஷ்யா மட்டுமே இதுவரை கொரோனாவுக்கான தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளும் தடுப்பு மருந்து ஆராய்ச்சிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், ஸ்வீடிஷ்-பிரிடீஷ் என்ற மருந்து தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆஸ்திரேலிய அரசு ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. அதன்படி,கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டறியப்பட்டால், அது ஆஸ்திரேலியாவுக்கு வழங்கப்படும்.
ஸ்வீடிஷ்-பிரிடீஷ் மருந்து தயாரிக்கும் நிறுவனமும், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த மருந்து தொடர்பான ஆய்வுகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், “ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து சோதனை வெற்றியடைந்தால், நம் நாட்டிலே அந்த மருந்து தயாரிக்கப்படும். அரசின் கட்டுப்பாட்டில் மக்கள் அனைவருக்கும் இந்த மருந்து அளிக்கப்படும். ஆஸ்திரேலியாவில் உள்ள இரண்டரை கோடி மக்களுக்கும் கட்டண வசூல் இல்லாமல் இந்த சேவை நடக்கும்.” எனக் கூறியுள்ளார்.