தல தோனிக்கு மிகப்பெரிய அளவில் பிரியாவிடை கொடுக்க காத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம்!
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று இந்தியாவே சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டிருந்தபோது, தல தோனி திடீரென சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இதனையடுத்து தோனிக்கு ஏராளமானோர் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் கூறி அவர் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிக்காக சேவை செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் தோனிக்கு பிரியாவிடை போட்டி ஒன்றை பிரமாண்டமாக நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் இது குறித்து பிசிசிஐ-ன் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தாங்கள் எப்போதும் தோனிக்கு பிரியாவிடை போட்டி நடத்த தயாராக இருகிறோம். ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில் ஓய்வை அறிவித்து விட்டு தான் ஒரு வித்தியாசமான வீரர் என்பதை தோனி உறுதி செய்துவிட்டார். கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றியுள்ள தோனி, மரியாதையுடன் பிரியாவிடை கொடுத்து அனுப்பி வைக்கப்பட வேண்டியவர். தோனி ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அவருக்கான மரியாதை பிசிசிஐ தரப்பில் கொடுக்கப்படும் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடர் நவம்பர் 10ஆம் தேதி முடிவடைய இருப்பதால் அதன்பின்னர் பிரியாவிடைக்கான போட்டி குறித்து தோனியிடம் பேசி அவரிடம் ஆலோசனை பெற்ற பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும், மேலும் தோனியின் பிரியாவிடை போட்டியில் இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலகின் மிகச்சிறந்த வீரர்கள் கலந்து கொள்ளவும் திட்டமிடப்பட்டிருப்பதாக பிசிசிஐ தரப்பினர் தெரிவித்தனர்.