ரஷ்யா கண்டுபிடித்துள்ள ‘ஸ்புட்னிக் வி’ கொரோனா வைரஸ் தடுப்பூசியை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் சி.இ.ஓ., விருப்பம் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல் கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரித்துவிட்டதாக சில தினங்களுக்கு முன்பு ரஷ்யா அறிவித்தது. ஸ்புட்னிக் வி என்று பெயரிடப்பட்டுள்ள அத்தடுப்பூசியின் முதல் கட்ட தொழிற்சாலை உற்பத்தி துவங்கிவிட்டது. அவை மருத்துவர்கள் போன்ற முன்கள பணியாளர்களுக்கு முதலில் வழங்கப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.
‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி குறித்து அமெரிக்கா, ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் சந்தேகம் தெரிவித்துள்ளன. மூன்றாம் கட்ட பரிசோதனையை பூர்த்தி செய்யாததும், பரவலாகவும் பரிசோதிக்கப்படாததுமே சந்தேகத்திற்கு காரணம். இருப்பினும் 1 கோடி மருந்துகளுக்கு விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது.
இந்நிலையில் ஆன்லைன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்தின் சி.இ.ஓ டிமிட்ரிவ் பேசியதாவது: தடுப்பூசி உற்பத்தி மிக முக்கியமான பிரச்சினை. தற்போது, நாங்கள் இந்தியாவின் கூட்டணியை நாடியுள்ளோம். அவர்கள் காமாலேயா தடுப்பூசியை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவர்கள். முக்கியமாக இக்கூட்டணியால் நம்மிடம் உள்ள தேவையை ஈடுக்கட்ட உதவும்.
ரஷ்யாவில் மட்டுமல்ல, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, பிரேசில் மற்றும் இந்தியாவிலும் மருத்துவ பரிசோதனைகளை செய்ய உள்ளோம். ஐந்துக்கும் மேற்பட்ட நாடுகளில் தடுப்பூசியை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். உலகின் பல பகுதிகளிலிருந்தும் தடுப்பூசிக்கு அதிக தேவை உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.
