சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக எஸ்.கவுரி நியமனம்

சென்னை பல்கலைக்கழக துணை வேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகம், நாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த பணியிடங்களில் தகுதியானவர்களை நியமிக்க 2 பல்கலைக்கழகங்களுக்கும் தனித்தனியாக தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
அந்தக்குழு 2 பல்கலைக்கழகத்துக்கும் தலா 3 பேரை தகுதியானவர்கள் என பட்டியல் தயாரித்து ஆளுநரிடம் வழங்கியது. அந்த பட்டியலை பரிசீலித்த ஆளுநர் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கவுரியையும், மீன்வள பல்கலைக்கழக துணை வேந்தராக ஜி.சுகுமாரையும் நியமித்து உத்தரவிட்டார். இதற்கான நியமன ஆணையை ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்.