“எத்தனை நாள் இந்தி தெரியாது என்பதால் அவமதிக்கப்படுவதை பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?” கனிமொழி எம்.பி. ஆவேசம்!
மத்திய ஆயுஷ் அமைச்சகம் சார்பில் 3 நாள் ஆன்லைன் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயிற்சி மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் இந்தி மட்டுமே பிரதானமாக பயன்படுத்தியது பங்கேற்றவர்கள் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் உச்சமாக, ஆயுஷ் அமைச்சக செயலாளர், ராஜேஷ் கொட்டேச்சா, இந்தி தெரியாதவர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி விடலாம் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆன்லைன் பயிற்சியில் பயிற்றுனர்கள் சொன்ன அனைத்தும் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மாநிலங்களிலிருந்து கலந்துக் கொண்ட மருத்துவர்களுக்கு புரியாததால், ஆங்கிலத்தில் அந்த விஷயங்களை விளக்குமாறு அவர்களை கேட்டுக்கொண்டனர். சில பங்கேற்பாளர்களின் கூற்றுப்படி, மருத்துவர்களின் பரிந்துரையை ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கோடெச்சா ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போது இந்தி புரியாத அனைவருமே அமர்வில் இருந்து வெளியேறலாம் என்று அந்த அதிகாரி கூறினார். அதோடு ஆங்கிலம் நன்றாக பேச முடியாது என்றும் கூறினார். பங்கேற்பாளர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை சொல்ல முற்பட்டபோது, சிக்கல் உருவாக்கியவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் இந்த விஷயத்தை ஆலோசிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தி மு.க எம்பி கனிமொழி வெளியிட்ட டிவிட்டர் பதிவில் “மத்திய ஆயுஷ் அமைச்சக செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, அமைச்சகத்தின் பயிற்சி வகுப்பில், இந்தி தெரியாதவர்கள் வெளியேறலாம் என்று சொல்லியிருப்பது மத்திய அரசின் இந்தி திணிப்பு கொள்கையை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு, உடனடியாக அந்த செயலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எத்தனை நாள் இந்தி தெரியாது என்றால் அவமதிக்க படுவதை, பொறுத்துக்கொள்ளப் போகிறோம்?” என்று தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.