ஆட்டோ சங்கராக மாறிய அர்ச்சகர்… கள்ளக்காதலியின் கணவனை புதைத்து சிமெண்ட் வைத்து பூசினார்

பண்ருட்டியில் மளிகைக் கடை ஊழியர் கோயிலில் புதைக்கப்பட்டிருந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன் (36). இவரது உடல் லிங்கரெட்டிப்பாளையத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் வளாகத்தில் இருந்து நேற்று முன் தினம் தோண்டி எடுக்கப்பட்டது. கண்ணதாசனின் செல்போன் எண்ணை ஆராய்ந்ததில் கடைசியாக அவர் கோயில் குருக்கள் கோபிநாத்திடம் பேசியிருப்பது தெரிந்து, அவரை பிடித்து விசாரித்தனர். அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அவர் அளித்த வாக்குமூலம்: லிங்கரெட்டிப்பாளையத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் அர்ச்சகராக உள்ளேன். ஜோதிடமும் பார்ப்பேன். நான்கு ஆண்டுகளுக்கு முன் என்னிடம் கண்ணதாசனின் மனைவி மஞ்சுளா வேலை தேடி வந்தார். ஜோதிடம் பார்க்க வருபவர்களுக்கு டோக்கன் போடுவது தான் அவர் வேலை. அவருடன் சில மாதங்களில் எனக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது.

நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்தோம். இதனை அறிந்துகொண்ட கண்ணதாசன், மஞ்சுளாவுக்கும் எனக்கும் தொல்லை கொடுத்து வந்தார். அதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கோயிலுக்கு வரவழைத்தேன். நானும் மஞ்சுளாவும் இரும்பு தடியால் அவரை தாக்கி கோயில் வளாகத்திலேயே நின்ற நிலையில் அவரை புதைத்தோம். பின்னர் கொத்தனார் மூலம் அதனை பூசி மெழுகிவிட்டேன்.
சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அவர் மனைவி மஞ்சுளா மூலமாகவே போலீஸிடம் புகார் கொடுக்க வைத்தேன். ஆனால் வழக்கு எனக்கு எதிராக திசை மாறிவிட்டது. இவ்வாறு கூறியுள்ளார். மஞ்சுளா, கோபிநாத்தை கைது செய்த போலீசார், கொத்தனாரை தேடி வருகின்றனர்.