“தமிழகம் முழுவதும் உள்ள பார்களை மூட உத்தரவிட முடியாது!” மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!!
தமிழகம் முழுவதும் பார்களை மூட உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் அருகிலுள்ள பார்களை மூட உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சிலம்பரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மதுபானக் கடைகளின் அருகில் உள்ள பார்களில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிக அளவில் நடப்பதாகவும், அவற்றின் அருகில் விபத்துகளும் நடைபெறுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், “மதுபானக் கடைகள் மற்றும் பார்களை மூடுவது என்பது மாநில அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மதுக்கடை பார்களை மூட வேண்டும் என உரிமையாகக் கோர முடியாது. மேலும் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஆனால் சட்டவிரோதமாக, உரிமம் இல்லாமல் செயல்படும் பார்களை மூடக் கோரி மனுத்தாக்கல் செய்ய மனுதாரருக்கு அனுமதி வழங்கபடுகிறது.” என்று கூறி நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.