ஊரடங்கை கொஞ்சம் கூட மதிக்காமல் மோட்டார் வாகனங்களில் ஊர்வலம் சென்ற பாஜக கட்சியினர்..!

புதுச்சேரியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பாஜகவில் இணைய முற்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலால் தற்போது புதுச்சேரியில் ஊரடங்கு விதிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதனால் 5க்கும் மேற்பட்டோர் கூட சேர்ந்து செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும், கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளும் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், விதிகளை மீறி கொரோனா தொற்றை பரப்பும் வகையில், 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் பாஜகவில் இணைய ஊர்வலமாக சென்றுள்ளனர்.
அதாவது புதுச்சேரி மேட்டுபாளையத்தை சேர்ந்தவர் ராஜமௌலி. இவர் தனது ஆதரவாளர்கள் 400 பேருடன் பாஜகவில் இணைய 100 மோட்டார் வாகனத்தில் ஊர்வலமாக வந்துள்ளனர். பாஜக தலைமையிடம் அமைந்துள்ள சித்தாந்த வீதியில் இந்த ஊர்வலமானது நடைபெற்றுள்ளது. அப்போது, இளைஞர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும், அதிக ஒலிகளை எழுப்பியும் அப்பகுதி மக்களுக்கு இடையூறு செய்துள்ளனர். பின்னர் கட்சி தலைமையிடத்திற்கு வந்தடைந்த ராஜமௌலி பாஜக மாநில தலைவர் சாமிநாதன் முன்பு கட்சியில் இணைந்தார். தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
இதனையடுத்து மத்திய பாஜக அரசு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்த தருணத்தில், சொந்த கட்சியினரே விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு செல்லும் இந்த பொறுப்பற்ற செயலால் புதுச்சேரியில் பல்வேறு சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது. மேலும் இந்த சம்பவம் கொரோனா தொற்றை பரப்பும் நோக்கத்தோடு இருப்பதாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், புதுச்சேரி மாநில அரசு இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.