தோட்டத்தில் பூ பறித்ததற்காக, 40 பட்டியலின குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கொடூரம்!!

ஒடிசா மாநிலத்தில், மாற்று சமூகத்தினரின் தோட்டத்தில் சிறுமி ஒருவர் பூ ஒன்றை பறித்ததால், 40 பட்டியலின குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் தென்கனல் மாவட்டம் கண்டியோ கட்டேனி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இதில் 40 குடும்பங்கள் பட்டயலினத்தை சேர்ந்தவர்கள். இந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் மாற்று சமூகத்தை சேர்ந்த ஒருவரின் தோட்டத்தில் பூ பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள், அந்த கிராமத்தில் உள்ள பட்டியலினத்தை சேர்ந்த 40 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த கொடூரம் நடந்துள்ளது.

அவர்கள் ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கவோ, மற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவோகூட அனுமதி இல்லை. இந்த விவகாரம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இரண்டு தரப்பையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் இப்போது அந்த கிராமத்தில் இயல்புநிலை திரும்பியுள்ளதாகவும், இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.