சின்னத்திரை நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நுங்கம்பாக்கம் மயானத்தில் அடக்கம்!

மறைந்த பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் நடிகர் வடிவேல் பாலாஜியின் உடல் நுங்கம்பாக்கம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் நடிகர் வடிவேல் பாலாஜி. அவருக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்பாக நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
இதனை தொடர்ந்து சேத்துப்பட்டு எம் எஸ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. அதில் ஏராளமான திரை பிரபலங்கள் நடிகர் விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சௌந்தர ராஜன், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர் உள்ளிட்டோரும், சின்னத்திரை நடிகர்களான தாடி பாலாஜி, ராமர், சேது, புகழ் தங்கதுரை போன்றோரும் வடிவேல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டிருக்கும் அவரது வீட்டிற்கு நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில் சேத்துப்பட்டு இல்லத்தில் இருந்து அவரது உடல் அடக்கம் செய்ய ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடிவேல் பாலாஜி உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.