செப்., 1 முதல் மெட்ரோ ரயில் சேவை துவக்கம்?

நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வில், நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவல் காரணமாக, நாடு முழுவதும், கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரத்தை கருதி, கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஊரடங்கின் மூன்றாம் கட்ட தளர்வுகள், வரும் 31-ம் தேதி வரை அமலில் உள்ளன.
இந்நிலையில், அன்லாக் 4 என்ற பெயரில், நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் அறிவிக்கப்பட உள்ளன. அப்போது, நாடு முழுவதும் மெட்ரோ ரயில்கள் இயக்க அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மக்கள் அதிகமாக கூடுவதற்கும், பள்ளிக் கல்லூரிகள் திறப்பதற்கான கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், மெட்ரோ ரயில்களை இயக்குவது குறித்த இறுதி முடிவை, மாநில அரசுகளே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்திற்கு குறைவான பயண நேரத்தை கொண்ட மெட்ரோ போக்குவரத்தை மட்டுமே மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.