கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!!

கேரள சட்டப்பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமைலான அம்மாநில அரசு மீது , சட்டமன்றத்தில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அவையில் நேற்று காலை தொடங்கி இரவு வரை 10 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பினராயி விஜயன் மூன்றரை மணி நேரத்திற்கு மேலாக பேசினார். அப்போது சபை நடுவே திரண்ட காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கேரள அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக 87 பேரும் எதிராக 40 பேரும் வாக்களித்தனர். இதனால் தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனிடையே, “ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருப்பதை ஒப்புக் கொள்வதாகவும், ஆனால் பினராயி விஜயன் தலைமையிலான அரசாங்கம் கேரள மக்களின் நம்பிக்கையை முற்றிலுமாக இழந்துவிட்டது” என எதிர்கட்சி தலைவரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.