ஊடகங்களில் அருவருக்கத்தக்க கருத்து: சுதந்திரமான அமைப்பை உருவாக்கக்கோரி மனு தாக்கல்

தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதம் என்ற பெயரில் அருவருக்கத்தக்க கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாக குற்றம்சாட்டியும், அதனைத் தடுக்க சுதந்திரமான அமைப்பு ஒன்றை அமைக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் திரு. ரீபக் கன்சால், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஊடக சுதந்திரம் என்ற பெயரில், தனி மனிதருக்கு எதிரான கருத்துக்களும், மதம், சமூகம் மற்றும் அரசியல் சிதைப்புக் கருத்துக்களும் திணிக்கப்படுகின்றன. பல ஊடகங்களில் விவாதம் என்ற பெயரில் அருவருக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் தகவல்கள் முன்வைக்கப்படுகின்றன.
உரிய ஒழுங்குமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், விதிகளையும் பின்பற்றாமல் சில மின்னணு ஊடகங்கள் செயல்படுவதால், குடிமக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கியுள்ள உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க சுதந்திரமான அமைப்பு ஒன்றை உருவாக்கி, ஊடக விவாதங்களைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு, இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யும்படி மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், செய்தி ஒலிபரப்புவோர் சங்கம், இந்திய பிரஸ் கவுன்சில் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.