இனி இந்தியர்கள் 16 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்க முடியும்!!

நேபாளம், பூட்டான், மொரீசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணிக்க முடியுமென இந்திய மத்திய அரசு, பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா தொடர்பான கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்,
‘இந்திய கடவுசீட்டு வைத்துள்ள குடிமக்கள் விசா இன்றி பார்படாஸ், பூட்டான், டொமினிகா, கிரெனடா, ஹெய்ட்டி, ஹொங்கொங், மாலைதீவுகள், மொரீஷியஸ், மொன்செராட், நேபாளம், நியு தீவு, செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ், சமோவா, செனகல், செர்பியா மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோ உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லாது பயணம் செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய பயணிகளுக்கு ஈரான், இந்தோனேசியா, மியன்மார் உள்ளிட்ட 43 நாடுகள் வருகையின் போது விசா பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்குவதாகவும் இலங்கை, நியூசிலாந்து, மலேசியா உள்ளிட்ட 36 நாடுகளில் இந்தியப் பயணிகளுக்கு ஈ-விசா வசதியை வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களுக்கான சர்வதேச பயணத்தை மேலும் எளிதாக்கும் வகையில் விசா இல்லாத பயணம், விசா-வருகை மற்றும் ஈ-விசா வசதிகளை வழங்கும் நாடுகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க இந்திய மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.