“போதிய அவகாசம் இருந்தும் தேர்வுக்குத் தயாராகாதது யார் தவறு?” ஹெச்.ராஜா!

போதிய கால அவகாசம் கொடுத்தும்கூட இதுவரை மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார் செய்யாமல் இருந்தது யார் தவறு?. இதற்கு மத்திய அரசு எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?.என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இன்று நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: “மொழிக் கொள்கைகளில் பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தப் பார்க்கும் திமுகவை மக்கள் புறக்கணிக்க வேண்டும். இருமொழிக் கொள்கைதான் வேண்டும் என பேசுவோர் சிபிஎஸ்இ போன்ற பள்ளிகளில் இருந்து தங்களது குடும்பத்தினரின் பிள்ளைகளை சமச்சீர் பள்ளிகளில் சேர்த்து விட்டுப் பேசட்டும். இல்லை என்றால் புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜக துணை இல்லாமல் 2021-ல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. அந்த அளவுக்கு வலிமையான இடத்தில் பாஜக இருக்கிறது. ஒருவேளை தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம்தான் காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டிய நிலை வந்தால், அது அக்கட்சியின் தலையெழுத்து. அதைப் பற்றி நான் கருத்து கூற முடியாது.
போதிய கால அவகாசம் கொடுத்தும்கூட இதுவரை மாணவர்களை நீட் தேர்வுக்குத் தயார் செய்யாமல் இருந்தது யார் தவறு?. இதற்கு மத்திய அரசு எவ்வாறு பொறுப்பேற்க முடியும்?. மத்திய அரசின் திட்டங்களில் முறைகேடு செய்யும் அலுவலர்கள் எந்த அரசுப் பணியிலும் இனிமேல் தொடர முடியாத அளவுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு ஹெச்.ராஜா தெரிவித்தார்.