“பாஜகவின் ரத யாத்திரையை ஒரு தமிழ் மகளாக எதிர்க்கிறேன்!” திவ்யா சத்யராஜ்!

கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருப்பதால் அதனை அனுமதிக்க கூடாது என்று திவ்யா சத்யராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஒரு பிரபலமான ஊட்டச்சத்து நிபுணர். இவர் கொரோனா நேரத்தில் தமிழ் மக்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவை இலவசமாக வழங்க ‘மகிழ்மதி’ என்ற இயக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன் மருத்துவத்துறையில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வை எதிர்த்தும் திவ்யா சத்யராஜ் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக அக்டோபர் மாதம் முதல் தமிழக பாஜக தலைவர் முருகன் தலைமையில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திவ்யா சத்யராஜ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் “கொரோனா நேரத்தில் தமிழ்நாட்டில் ரத யாத்திரை நடந்தால் மக்களுக்கு கொரோனா பரவ வாய்ப்புகள் இருக்கிறது. கொரோனா நேரத்தில் ரத யாத்திரை அனுமதிப்பது நியாயம் கிடையாது. தமிழ் மக்களின் உடல் நலத்தின் மீதும் உயிர் மீதும் அக்கறை கொண்டுள்ள ஒரு ஊட்டச்சத்து நிபுணராகவும், தமிழ் மகளாகவும் இந்த ரத யாத்திரையை எதிர்க்கிறேன். மதத்தை வளர்ப்பதில் இருக்கும் அக்கறை மக்களின் உயிர் மீதும் உடல் நலத்தின் இருக்கிறது மீதும் இல்லாதது வருத்தமாக இருக்கிறது” என்றும் திவ்யா சத்யராஜ் தெரிவித்துள்ளார்.