பேரறிவாளன் பரோல் மீது முழு அதிகாரம் இருந்தும் தமிழக அரசு முடிவெடுக்காதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

90 நாட்கள் பரோல் கேட்டு பேரறிவாளன் தாயார் கொடுத்த மனு மீது தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில் முடிவெடுக்காதது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலால் பெரறிவாளனுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் என்பதால் பரோல் கோரி அற்புதம்மாள் மனு தாக்கல் செய்தார். பேரறிவாளன் பரோல் பற்றி முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில் முடிவெடுக்காதது ஏன் என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மனு மீது முடிவெடுக்காமல் சிறைத்துறைக்கு அனுப்பியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணையின் போது சிறைத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், பேரறிவாளன் ஏற்கெனவே பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறையில் இருந்து வெளியே அனுப்பினால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பரோல் கோரிய மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இது போன்ற சூழலில் பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலாளர் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, 2017 மற்றம் 2019 ஆம் ஆண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டதற்கான உத்தரவுகளை தாக்கல் செய்ய பேரறிவாளன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர். பரோல் மனு தொடர்பாக அரசு அவகாசம் கேட்டதை அடுத்து வழக்கு ஆகஸ்ட் 31 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.