ஓணம் பண்டிகை: இன்று மாலை சபரிமலை நடை திறப்பு

ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.
கேரள மாநிலத்தில், ஓணம் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். அப்போது, புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில், மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். நாளை உத்ராட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதை தொடர்ந்து 31-ந் தேதி திருவோண தின சிறப்பு வழிபாடு, செப்டம்பர் 1-ம் தேதி அவிட்டம் நாள் சிறப்பு பூஜை, 2-ம் தேதி சதயம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
கொரோனா பரவல் காரணமாக, கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கான தடை நீடிப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.