“தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது!” அடித்து கூறும் பா. வளர்மதி!
தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அலை வீசுவதாக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் சென்னை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். இளைஞர் மற்றும் இளம்பெண்கள் உறுப்பினர் சேர்க்கையை தமிழக பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில் கலந்து கொண்டு பேசிய பா.வளர்மதி, “ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் உள்ள அனைவரையும் அதிமுகவில் இணைக்க வேண்டும். திமுகவுக்கு இப்போதே தேர்தல் பயம் வந்துவிட்டது. தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அலை வீசுகிறது. மாணவர்கள் அனைவரையும் அரியர் இல்லாமல் பாஸ் செய்ய வைத்ததால், மீண்டும் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வராக வரவேண்டும் என மாணவர்கள் நினைகிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில், 500க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியின்றி பங்கேற்றனர்.