காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!!!

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறையில் காலியாக உள்ள தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாநில செய்தித் தொடா்பாளா் மு. முருகேசன் தெரிவித்திருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் மாவட்டக் கல்வி அலுவலா் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதேபோல் 400 உயா்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்கள், 200 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த பதவிகளை உடனடியாக பதவி உயா்வின் மூலம் கலந்தாய்வு நடத்தி நிரப்ப வேண்டும்.
அதன் மூலம் காலியாகும் உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் பணியிடங்கள், முதுகலை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் காலியாக உள்ள முதுகலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் மற்றும் சிறப்பு ஆசிரியா்களுக்கும் ஒளிவு மறைவின்றி பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளாா்.