மன்னிப்பெல்லாம் கேட்கவே முடியாது: வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீண்டும் திட்டவட்டம்

நீதித் துறை மீது, தாம் வைத்த விமர்சனங்களுக்கு ஒருபோதும் மன்னிப்பு கேட்க முடியாது என்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும் விமர்சித்து கருத்து தெரிவித்த விவகாரத்தில், பிரசாந்த் பூஷண் குற்றவாளி என தீர்ப்பளித்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, அதற்கான தண்டனை குறித்த விசாரணையை கடந்த 21-ம் தேதி மேற்கொண்டது. அப்போது, பூஷண் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதிபதிகள், அவர் தெரிவித்த கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய 3 நாட்கள் அவகாசம் வழங்கினர்.
ஆனால், அன்றைய விசாரணையின் போதே, ஒருபோதும் மன்னிப்புக்கோர முடியாது என பிரசாந்த் பூஷண் திட்டவட்டமாக தெரிவித்தார். இதற்காக, தனக்கு என்ன தண்டனை அளித்தாலும், மகிழ்ச்சியுடன் ஏற்க தயார் என்றும் உறுதியாக கூறினார். மேலும், ஜனநாயக உரிமைகளுக்குட்பட்டே நீதிமன்றத்தை விமர்சனம் செய்ததாகவும், மனம்போன போக்கிலோ, யோசனை இன்றியோ விமர்சனம் செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், நீதிபதிகள் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் பிரசாந்த் பூஷண் துணை அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தாம் மன்னிப்பு கேட்கவே முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதில் உச்சநீதிமன்றமே கடைசி புகலிடம் என்றும், மன்னிப்பு கேட்பதிலும் கூட ஒரு நேர்மையான முறை இருக்க வேண்டும் என்றும் பூஷண் சுட்டிக்காட்டியுள்ளார்.