கடந்த ஆண்டை விட இந்தாண்டில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது.!!!

இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தேசிய தேர்வு முகமை புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு 2017 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அழுத்தம் கொடுக்கப்படும் என்று அ.தி.மு.க அறிவித்தது. நான்கு ஆண்டுகளாக அழுத்தம் கொடுத்து வருவதாக அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு மட்டுமே வருகிறது. ஆனால், விலக்கு மட்டும் வரவில்லை. இதனால், நீட் தேர்வு தான் நமக்கு விதிக்கப்பட்ட ஒன்று என்ற முடிவுக்கு வந்துவிட்ட மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றனர்.

கடந்தாண்டுகளில் தமிழக மாணவர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்களை ஒதுக்கியதாலும், தேர்வு மையங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாலும் மாணவர்களிடையே நீட் தேர்வை எதிர்கொள்வது குறித்த விரக்தி ஏற்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.

வரும் செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் நீட் தேர்வை எழுத, நாடு முழுவதும், 15,97,433 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு 1,34,714 மாணவர்கள் நீட் தேர்வை எழுதிய நிலையில், நடப்பு ஆண்டில் 1,17,990 மாணவர்களே நீட் தேர்வை எழுத பதிவு செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு 16,724 பேர் குறைவாக தேர்வு எழுத பதிவு செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமையின் புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டைவிட 13% பேர் குறைவாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அதேவேளையில் பீகாரில் 28% பேரும், உத்தர பிரதேசத்தில் இருந்து 16% பேரும் கூடுதலாக நீட் தேர்வுக்கு இந்த ஆண்டு விண்ணப்பித்துள்ளனர். மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வு மையங்களின் எண்ணிக்கையை தேசிய தேர்வு முகமை அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 188-ல் இருந்து 238 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x