தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டும் மோப்ப நாய்கள்!!

பின்லாந்தில் உள்ள ஹெல்சிங்கி விமான நிலையத்தில் மோப்ப நாய்கள் மூலம் கொவிட்-19 தொற்றுநோய் கண்டுபிடிக்கப் படுகிறது.
இதற்காகப் பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள், பயணிகளை முகர்ந்து தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காட்டுகிறது.
ஆனால் இது ஒரு முன்னோடித் திட்டம். தொற்றுநோயைக் கண்டுபிடிக்கும் நாய்களின் ஆற்றல் இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. இதனால் வழக்கமான ‘சளி’ மாதிரி சோதனைகளுக்கு பயணிகளை அனுப்பி உறுதிப்படுத்துகிறோம் என்று ஹெல்சிங்கி விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனியார் மருந்தகம் ஒன்றின் ஆதரவுடன் பத்து பயிற்சியாளர் களும் 15 மோப்ப நாய்களும் அடங்கிய குழுவுக்கு தொண்டூழியர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.
“நோயாளிகளிடம் அறிகுறிகள் தென்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பே மோப்ப நாய்களால் தொற்று நோயைக் கண்டுபிடிக்க முடியும் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது,” என்று ஹெல்சிங்கி பல்கலைக் கழகத்தின் பேராசிரியரான ஹில்ம்-ஜோர்க்மேன் தெரிவித்தார்.
“மோப்ப நாய்கள் சிறப்பாகச் செய்கின்றன. நூறு விழுக்காடு வரை உண்மையாக இருக்கிறது,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
மோப்ப நாய் சோதனையில் பயணிகள் தங்களுடைய கழுத்தை ஒரு துணியால் துடைத்து ஒரு கிண்ணத்தில் போடுகின்றனர். பின்னர் இந்தக் கிண்ணம், மோப்ப நாய்கள் உள்ள அறைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்குள்ள மோப்ப நாய்கள் துணியை முகர்ந்து தொற்று நோயை உடனடியாக கண்டுபிடிக்கின்றன.