“வெறுப்பு கருத்துகள் இனி உடனடியாக நீக்கப்படும்!” காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் மூலம் உறுதியளித்த முகநூல்!

முகநூல் நிறுவனத்தின் பாரபட்சமான இந்திய செயல்பாடுகள் குறித்து கடிதம் எழுதிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபாலுக்கு முகநூல் பதில் கடிதம் அனுப்பியுள்ளது.
சமீப காலமாக பிரபல சமூக வலைத்தளமான முகநூல் பாஜக கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதனை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல்காந்தி, ப.சிதம்பரம் போன்றோர் ஆதரித்தும், பாஜக தலைவர்கள் மறுப்பு தெரிவித்தும் வந்தனர்.
இதுகுறித்து முகநூல் நிறுவனத்திற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி வேணுகோபால் தனது கட்சியின் அதிருப்தியை கடிதம் வாயிலாக தெரிவித்திருந்தார். அதற்கு தற்போது முகநூல் நிறுவனம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், “நாங்கள் யாருக்கும் ஆதரவாக செயல்படவில்லை. அனைத்து தரப்பு மக்களும் தங்களது கருத்துகளை சுதந்திரமாக வைக்கும் இடமாக முகநூல் இருக்கவே விரும்புகிறோம். ஒரு சாராருக்கு நாங்கள் ஆதரவாக செயல்படுவதாக வைக்கப்படும் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். வெறுப்பு கருத்துகள் எந்த வகையில் இருந்தாலும் அதனை அனுமதிக்கமாட்டோம்.
மேலும் இந்தியாவில் பொது வாழ்க்கையில் இருப்பவர்களால், முகநூலில் பதிவு செய்யப்பட்ட வெறுப்பு கருத்துகள் அனைத்தும் நீக்கப்பட்டுவிட்டன. வரும் காலத்தில் அதுபோன்ற கருத்துகள் ஏதேனும் பதிவு செய்யப்பட்டால் அதுவும் நீக்கப்படும். சுதந்திரமாக கருத்து தெரிவிக்கும் தளமாக முகநூலை மாற்றுவதற்காக அதிகபட்ச நேர்மையுடன் நாங்கள் செயல்படுகிறோம்” என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.