“இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது!” முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளிகளை திறக்க முடியாது. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறைந்த பிறகு பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதால், மாணவர்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். சமீபத்தில், கொரோனா பாதிப்பு தன்மை பொறுத்து மாநில அரசாங்கம் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.
ஊரடங்கு உத்தரவு வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை தொடரும் எனவும், அதுவரை பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில், அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில், “தற்போது கேரளாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறந்தால், மேலும் கொரோனா தொற்று அதிகரிக்கக்கூடும். எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பள்ளிகளை திறக்க முடியாது. மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே அனைத்து அரசு பள்ளிகளையும் தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.