அண்ணா பல்கலைத் துணைவேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்யக்கோரி உதயநிதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்!

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்வதை கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நிதி தேவையில்லை என்று கடிதம் எழுதிய சூரப்பாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் முன் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக இளைஞரணியினர் மற்றும் மாணவர்கள் என சுமார் 500-க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். மேலும், மத்திய அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தி கோஷமிட்டு அவர்கள் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர். இதேபோன்று தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் திமுக இளைஞரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.