பிரபல நடிகை ராகிணி திவேதி அதிரடி கைது.. போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு..

போதைப்பொருள் பயன்படுத்தியது மற்றும் அந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக பிரபல கன்னட மற்றும் தமிழ் திரைப்பட நடிகை ராகிணி திவேதி நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்திருந்தனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.
இவர்களில் நடிகை ராகிணி திவேதியின் நண்பரான ரவியை , 5 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். நடிகை ராகிணி திவேதியும், ரவி சங்கரும் திருமணம் செய்து கொள்ளலாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், இதற்காக ராகிணி திவேதிக்கு ரவி சங்கர் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், நேற்று காலை ராகிணி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு 6 போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள்.
நேற்று காலையில் இருந்து மாலை வரை நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலையில் நடிகை ராகிணி திவேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார். ராகிணி திவேதி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை காணொலி காட்சி மூலமாக கோர்ட்டில் ஆஜர்படுத்தி காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் சந்தீப் பட்டீல் தெரிவித்தார்.
நடிகை ராகிணி திவேதி கன்னட திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருகிறார். அவர் கன்னடத்தில் ராகிணி ஐ.பி.எஸ். சிவம், கெம்பேகவுடா, வீரமதகரி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்த நிமிர்ந்து நில் படத்தில் ராகிணி திவேதி கதாநாயகியாக நடித்து பிரபலமாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.