எல்லையில் நிலவும் மோசமான சூழ்நிலைக்கு இந்தியா தான் காரணம்! சீன பாதுகாப்பு அமைச்சர் ஆதங்கம்!

எல்லையில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு இந்தியாதான் ஒட்டுமொத்த பொறுப்பு என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கி தெரிவித்தார்.
இது தொடர்பாக சீன அரசு ஊடகமான ஷின்ஹுவா ஏஜென்சி சீன பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கி கூறுகையில், “எல்லை விவகாரத்தில் சமீபகாலமாக இருநாடு மற்றும் இருநாட்டு ராணுவங்கள் இடையேயான உறவுகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்களும் முகத்துக்கு முகம் நேர் கொண்டு சந்தித்து சம்பந்தப்பட்ட விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும்” என்று கூறியதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஜெனரல் வெய், ‘சீன-இந்திய எல்லையில் நடப்பு பதற்றங்களின் காரணமும் உண்மையும் தெளிவாகத் தெரிகிறது. முழுப்பொறுப்பும் இந்தியத் தரப்பில் தான் உள்ளது, சீனாவின் ஒரு அங்குல இடத்தை கூட இழக்க நாங்கள் தயாராக இல்லை. சீன ராணுவத்தில் இறையாண்மையை பாதுகாக்கவும் பிராந்திய ஒருங்கிணைப்பை பராமரிக்கவும் திறமை உள்ளது.
இருதரப்புகளும் அதிபர் ஜின்பிங் – பிரதமர் மோடியிடையே ஏற்பட்ட கருத்தொற்றுமை அடிப்படையில் பரஸ்பர பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை இந்தியா தீவிரமாகப் பின்பற்றும் என்று நம்புகிறோம். சூழ்நிலை உஷ்ணமாகும் எந்தச் செயலையும் இந்தியா செய்யக் கூடாது. அல்லது வேண்டுமென்றே சூழ்நிலையை ஊதிப்பெருக்கி எதிர்மறைத் தகவல்களைப் பரப்பாமல் இருக்க வேண்டும்.
இருதரப்பும் சீனா-இந்தியா இடையேயான ஒட்டுமொத்த உறவுகள், பிராந்திய அமைதி , ஸ்திரத்தன்மை ஆகிய நலன்களுக்காக பாடுபட வேண்டும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். நடப்பு சூழ்நிலையின் இறுக்கத்தை இருதரப்பினரும் தளர்த்த வேண்டும். சீன இந்திய எல்லையில் அமைதியும் சமாதானத்தையும் பாதுகாக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.