“மீசை வைத்த எல்லோரும் கட்டபொம்மனாக முடியாது! நடிகர் விஜய் பற்றி அமைச்சர் ஜெயக்குமார் பதில்!
நடிகர் விஜயை எம்.ஜி.ஆராக சித்தரித்து ஒட்டிய போஸ்டர், சசிகலா வருகை, பாஜக தலைவர் எல்.முருகன் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் சுடச்சுட பதிலளித்துள்ளார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் ஜெயக்குமார் பேசும்போது “கப்பலோட்டிய தமிழன், கப்பலோட்டிய இந்தியன் என்ற அளவில் தமிழனுக்கும் இந்தியனுக்கும் பெருமை சேர்த்தவர் வ.உ.சி. அவர்கள்!” என்றார்.
நடிகர் விஜயை எம்.ஜி.ஆராக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்டர் குறித்து எழுப்பிய கேள்விக்கு “மீசை வைத்தவர்களெல்லாம் கட்டபொம்மனாகிவிட முடியாது. செஞ்சிக்கோட்டை ஏறியவர்கள் எல்லாம் ராஜாதேசிங்கு ஆகிவிட முடியாது” என்று கூறினார். மேலும், கூட்டணி குறித்து அமைச்சர்கள் பேசக்கூடாது என எல்.முருகன் எங்களுக்கு கட்டளையிட முடியாது என்றும் தெரிவித்தார்.
சசிகலா விடுதலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு “சசிகலா வந்தாலும் வராவிட்டாலும் அதில் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. கட்சியும் ஆட்சியும் சசிகலா மற்றும் அவரது குடும்ப தலையீடு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அரசின் நிர்வாக காரணங்களுக்காவே இராமநாதபுரம் எஸ்.பி.வருண்குமார் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். பாஜகவின் புற அழுத்தம் காரணமாகவே அவர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டதாக வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு எந்த அழுத்தமும் எங்களை நிர்பந்திக்க முடியாது” என பதிலளித்தார்.