பாஜகவின் ஏழாவது முஸ்லிம் எம்.பியாக போட்டியின்றி தேர்வான ஜபர் இஸ்லாம்!!

நாடாளுமன்ற மாநிலங்களவையின் இடைக்கால உறுப்பினராக ஜபர் இஸ்லாம் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார். இவர் பாஜகவின் வரலாற்றில் தேர்வான ஏழாவது முஸ்லிம் எம்.பி. ஆவார்.
உத்தரபிரதேசத்திலிருந்து மாநிலங்களவைக்கு சமாஜ்வாதி கட்சி சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்த அமர் சிங் கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த இடத்துக்கு செப்டம்பர் 11-ம் தேதி இடைத்தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாளாகும். பாஜக சார்பில் சையது ஜபர் இஸ்லாம் மனு தாக்கல் செய்திருந்தார். பாஜகவைச் சேர்ந்த கோவிந்த் நரேன் ஷுக்லா, சுயேச்சை வேட்பாளர் மகேஷ் சந்திரா ஆகியோரும் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அடுத்த நாளே கோவிந்த் நரேன் ஷுக்லா தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
அதே நேரத்தில் சர்மாவின் வேட்பு மனுவில் 10 பேரவை உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும். ஆனால் அவரது மனுவில் 10 எம்எல்ஏ-க்கள் கையெழுத்து போடாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. கடைசி நாள் வரை வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால் ஜபர் இஸ்லாம் போட்டியின்றி தேர்வாகியுள்ளார் என்று தேர்தல் அதிகாரி பிரிஜ்பூஷண் துபே தெரிவித்தார்.

பாஜகவின் ஊடகப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற டாக்டர் சையது ஜபர் இஸ்லாம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர், மும்பையில் ஜெர்மனியின் டச் வங்கியின் இயக்குநராகப் பணியாற்றியவர். மகராஷ்டிர பாஜகவில் கடந்த ஏழு வருடங்களாக முக்கியப் பங்காற்றியவர். 2014 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக்கப்பட்ட நரேந்திர மோடி பிரச்சாரக் குழுவிலும் இடமளிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மத்தியப் பிரதேசத்தில் பாஜக முதல்வராக சிவராஜ்சிங் சவுகான் மீண்டும் அமர, ஜபர் ஒரு முக்கியக் காரணமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் அவரது நெருங்கிய நண்பரான காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, பாஜகவில் இணைந்தது பேசப்படுகிறது.
இதைப் பாராட்டும் வகையில் ஒரு முஸ்லிமான ஜபர் இஸ்லாமை உ.பி. சார்பில் மாநிலங்களவையின் இடைக்கால உறுப்பினராக்கி உள்ளது. பாஜக வரலாற்றில் நாடாளுமன்ற எம்.பி.யாக்கப்பட்டுள்ள ஏழாவது முஸ்லிமாக ஜபர் இடம் பெற்றுள்ளார். அவர் மாநிலங்களவை உறுப்பினராக 2022-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி வரை இருப்பார். மாநிலங்களவை எம்.பியாக இஸ்லாம் தேர்வானதற்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்கள் அதிகம் விரும்பாத கட்சியாகக் கருதப்படும் பாஜகவில் 2019 மக்களவைத் தேர்தலில் அம்மதத்தினர் ஏழு பேர் போட்டியிட்டனர். ஆனால், ஒருவரால் கூட இதில் வெற்றி பெற முடியவில்லை. இதனிடையே, ஜபர் இஸ்லாமிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர், டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஜபர் சார்பில் ஜே.பி.எஸ்.ராத்தோர் என்பவர் பெற்றுக் கொண்டார்.