அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஆதரவு தெரிவிக்கும் பின்லேடன் மருமகள்!

ட்ரம்பால் மட்டுமே செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றுமொரு பயங்கரவாத தாக்குதல் நடக்காமல் தடுக்க முடியும் என்று பின்லேடனின் மருமகள் தெரிவித்துள்ளார்.
ஒசாமா பின்லேடனின் மருமகள் நூர் பின் லேடின், ஆங்கில செய்தித்தாள் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, ”ஜோ பிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் செப்டம்பர் 11 தாக்குதலை போன்று மற்றொரு பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா எதிர்கொள்ளக்கூடும். முன்னதாக அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா / பிடன் ஆட்சி நிர்வாகத்தில ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்கம் பெருகியது. அவர்கள் ஐரோப்பாவிற்கு வர வழிவகுத்தது.
னால், பயங்கரவாதிகளை வேரோடு ஒழிப்பதில் ட்ரம்ப் முன்மாதிரியாக திகழ்கிறார். வெளிநாட்டு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவையும் எங்களையும் ட்ரம்ப் திறம்பட காப்பாற்றி வருகிறார். 2015-இல் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் போட்டியிடுவதாக அறிவித்த நாளிலிருந்து நான் ட்ரம்ப்பின் ஆதரவாளராக இருந்தேன். நான் அந்த மனிதரை தூரத்திலிருந்தே பார்த்தேன். அவரின் உறுதியான தீர்மானங்களை பாராட்டுகிறேன். அவர் மீண்டும் அதிபராக வரவேண்டும். இது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மேற்கத்திய நாடுகளின் எதிர்காலத்திற்கும் இன்றியமையாதது.
கடந்த 19 ஆண்டுகளில் ஐரோப்பாவில் நடந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நீங்கள் பார்க்கிறீர்கள். அவை எங்களை முழுவதுமாக அசைத்துவிட்டன. நான் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்தாலும், இதயத்தில் அமெரிக்கராக நினைத்து வாழ்கிறேன்” என்று நூர் பின் லேடின் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.