பீஹாரின் “உதயநிதி” என்று அழைக்கப்படும் சிராக் பஸ்வான்!!

பீஹாரில் சட்டசபை தேர்தல் அடுத்த மாத இறுதியில் தொடங்க உள்ளது. பா.ஜ.,- ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு பக்கமும், ராஷ்ட்ரீய ஜனதா தளம், -காங்கிரஸ்,- பிற உதிரி கட்சிகள் உள்ளிட்ட மஹா கூட்டணி இன்னொரு பக்கமும் போட்டியிட உள்ளன.
இப்போது முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கொரோனா பரவலால், இந்த முறை, தேர்தல் பிரசாரம் மந்தமாகத் தான் இருக்கும். வழக்கமாக மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரம் செய்யும் பிரதமர் மோடி, இம்முறை, ‘வீடியோ’ மூலமாக பிரசாரம் செய்யவிருக்கிறார். காங்., முன்னாள் தலைவர் ராகுலும் வீடியோ பிரசாரம் செய்ய உள்ளார்.
ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி, எஸ்.சி., பிரிவினரின் ஓட்டுகளை நிதிஷ் கூட்டணிக்கு அள்ளித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஸ்வானின் மகன் சிராக் பஸ்வான் இப்போது கட்சியின் தலைவராக உள்ளார். கட்சியில் ஆதிக்கம் செலுத்துவது இவர்தான். பீஹார் சட்டசபை தேர்தலில், தங்கள் கட்சிக்கு அதிக தொகுதிகள் வேண்டும் என இப்போதே பிரச்னையை ஆரம்பித்துவிட்டார்.
அதோடு டில்லி தினசரிகளில் முதல் பக்க விளம்பரத்தில் தன் படத்தைப் பெரிதாக போட்டு, அப்பா பஸ்வானின் படத்தை சின்னதாக்கிவிட்டார். ஹிந்தி சினிமாவிலும் நடித்துள்ள சிராக் பஸ்வானை, வட மாநில அரசியல்வாதிகள், பீஹாரின் “உதயநிதி” என, கிண்டலாக அழைக்கின்றனர்.