கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் இல்லையெனில்… செப். 30 வரை தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்காது!

தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்று தொடங்கிய நிலையில் ஆம்னி பேருந்துகளை இந்த மாதம் முழுவதும் இயக்கப்போவதில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பொதுப்போக்குவரத்து இன்று முதல் தொடங்கும் என அரசு அறிவித்தது. அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி உரிய வழிகாட்டுதல்களுடன் அரசு விரைவுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேப்போன்று பயணிகள் விரைவு ரயில்களும் இயங்கத் தொடங்கிவிட்டன.
ஆனால் ஆம்னி பேருந்துகளின் நிலைமை தற்போது கேள்விகுறியாகியுள்ளது. ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் பயணிகள் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆம்னி பேருந்து தொழிலால் பயன்பெறும் நிலையில் கடந்த 5 மாதங்களாக ஆம்னி பேருந்து இயக்கப்படாததால் கடும் சிரமத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் 4600 தனியார் ஆம்னி பேருந்துகள் உள்ளன. தற்போது பொதுப்போக்குவரத்து தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தக்கட்ட நிலை குறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதில் சில முக்கிய கோரிக்கைகளை அரசுக்கு வைத்துள்ளனர். அவை “பாதி அளவில் (50%) பேருடன் இயக்கலாம் என அரசு அறிவித்துள்ள நிலையில் 50 சதவீத பயணிகளுடன் இயக்கினால் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே 100 சதவீத அளவில் பயணிகளுடன் இயக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பேருந்துகள் இயங்காத நிலையில் காலாண்டு வரியை ரத்து செய்யவேண்டும் , பெரும்பாலான பேருந்துகள் ஏசி வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஏசி வசதியை பயன்படுத்த அனுமதிக்கவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளனர். இந்தகோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே பேருந்துகளை இயக்கமுடியும் என்பதால் வரும் செப்.30 வரை பேருந்துகளை இயக்க வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளனர்.