கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு ஆக. 26 வரை நீதிமன்றக் காவல்

கேரள தங்க கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் உள்ளிட்ட 3 பேரை வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி கொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக, என்.ஐ.ஏ., விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் தூதரக அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் மற்றும் அவரது கூட்டாளி சந்தீப் நாயர், தூதரக முன்னாள் ஊழியர் சரித்குமார், சந்தீப் நாயரின் மனைவி சௌமியா, ரமீஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே போல் சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக, கொச்சி அமலாக்கப் பிரிவும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ஸ்வப்னா, சரித், சந்தீப் நாயர் ஆகியோரின் விசாரணைக் காவல் முடிவடைந்ததையடுத்து, அவர்கள் மூவரையும் அமலாக்கத்துறையினர் நேற்று கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையடுத்து அவர்கள் மூவரையும் வரும் 26ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.