திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகைக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

திருவனந்தபுரம் விமான நிலைய குத்தகைக்கு இடைக்கால தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தை இயக்கும் பொறுப்பை, அதானி குழுமம் குத்தகைக்கு எடுத்துள்ளது. இதற்கு, கடந்த வாரம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. விமான நிலையத்தை தனியாருக்கு விடும் முடிவை திரும்ப பெறும்படி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், குத்தகையை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்கக்கோரி கேரள அரசு சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.
மேலும், செப்டம்பர் 9-ம் தேதிக்குள் ஆவணங்களை கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 15-ம் தேதி விரிவான விசாரணை நடைபெறும் என்றும் உத்தரவிட்டுள்ளது.