வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் மூன்று மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனபடுத்திய சூடான் அரசு!

நைல் நதியால் சூழப்பட்ட ஆப்பிரிக்க நாடான சூடானில் வரலாறு காணாத வெள்ள பெருக்கு காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மூன்று மாதங்களுக்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டு உள்ளது.
இது குறித்து சூடான் அரசு தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “சூடானில் கடந்த ஒரு மாதமாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள பெருக்கால் இதுவரை 99 பேர் பலியாகியுள்ளனர்; 46 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நைல் நதியில் வெள்ளம் ஓடுவது இது புதிதல்ல, ஆனால் இதன் பாதிப்பு இதுவரை கண்டிராதது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்து வேறு இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சூடானில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சமாளிப்பதற்காக மூன்று மாத அவசர நிலைக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சூடானில் வழக்கமாக ஜூன் மற்றும் அக்டோபர் மாதங்களில் பருவ மழை பொழியும். சூடானில் கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். இம்முறை அதைவிட அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.