போராட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் கைது!!!

திமுக மகளிரணி பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜக மாநில மகளிர் அணி செயலாளர் ஜெயலட்சுமி மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹத்ராஸில் 19 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் ஹத்ராஸ் இளம்பெண் கொடூர கொலையை கண்டித்து, திமுக மகளிரணி சார்பில் கனிமொழி எம்பி தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது. தடையை மீறி பேரணி நடத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளில் கனிமொழி எம்பி உள்பட 191 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், திமுக மகளிரணி பேரணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இரவில் பாஜக மாநில மகளிர் அணி செயலாளரும், நடிகையுமான ஜெயலட்சுமி தலைமையில் கிண்டியில் 11 பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கிண்டி போலீசார் ஜெயலட்சுமி உள்ளிட்ட 11 பேரையும் கைது செய்து, அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.