பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தையை தீயிட்டு எரித்து கொன்ற கொடூரம்! போலீஸார் தீவிர விசாரணை!

சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. அதேபோல் பிறந்து சில நாட்களிலே பச்சிளம் குழந்தைகளை சாலைகளில் வீசி செல்லும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெறுகிறது.
அவ்வாறு சாலையில் வீசப்படும் குழந்தைகள் மீட்டு காப்பகங்களிலும் ஒப்படைக்கப்படுகின்றன. ஒருசில இடங்களில் குழந்தைகள் உயிரிழக்கவும் நேரிடுகிறது. அதுகுறித்து பல்வேறு காவல்நிலையங்களில் ஏராளமான புகார்கள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் சங்கரன்கோவிலில் பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை தீயிட்டு எரிக்கப்பட்ட கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தனியாருக்கு சொந்தமான தியேட்டர் வளாகத்தில் பச்சிளம் குழந்தை எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு விரைந்த போலீசார் தீயில் எரிந்த நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அக்குழந்தை பிறந்து 4 நாட்களே ஆன ஆண் குழந்தை என்பது விசாரணையில் உறுதியானது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தையை எரித்துக்கொன்றது யார்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.